திருக்குறள்
9. விருந்தோம்பல் (Hospitality) குறள்கள்
81
இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு.
பொருள்: வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவிசெய்யும் பொருட்டே ஆகும்.
English Version82
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா மருந்துஎனினும் வேண்டற்பாற் றன்று.
பொருள்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.
English Version83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.
பொருள்: தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
English Version84
அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்.
பொருள்: நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
English Version85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி மிச்சில் மிசைவான் புலம்?
பொருள்: விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
English Version86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு.
பொருள்: வந்த விருந்தினரைப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.
English Version87
இணைத்துணைத்து என்பதொன்று இல்லை: விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.
பொருள்: விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்திக் கூறத்தக்கது அன்று; விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
English Version88
பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.
பொருள்: விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பொருள்களை வருந்திக் காத்து (பின்பு இழந்து) பற்றுக் கோடு இழந்தோமே என்று இரங்குவர்.
English Version89
உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை: மடவார்கண் உண்டு.
பொருள்: செல்வ நிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்; அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
English Version90
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.
பொருள்: அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்; அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.
English Version