திருக்குறள்
21. தீவினையச்சம் (Dread of Evil Deeds) குறள்கள்
201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னுஞ் செருக்கு
பொருள்: தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
English Version202
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்
பொருள்: தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
English Version203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்
பொருள்: தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
English Version204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு
பொருள்: பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
English Version205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து
பொருள்: யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
English Version206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்
பொருள்: துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
English Version207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்
பொருள்: எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
English Version208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉரைந் தற்று
பொருள்: தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.
English Version209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்
பொருள்: ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
English Version210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்
பொருள்: ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
English Version