திருக்குறள்
85. புல்லறிவாண்மை (Ignorance) குறள்கள்
841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு.
பொருள்: அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
English Version842
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் தவம்.
பொருள்: அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.
English Version843
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது.
பொருள்: அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.
English Version844
வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னுஞ் செருக்கு.
பொருள்: புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.
English Version845
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும்.
பொருள்: அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.
English Version846
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி.
பொருள்: தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.
English Version847
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.
பொருள்: அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.
English Version848
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய்.
பொருள்: தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.
English Version849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு.
பொருள்: அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.
English Version850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்.
பொருள்: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
English Version